கூச்சிங், டிசம்பர் 8 :
12வது சரவாக் மாநிலத் தேர்தலில் (பிஆர்என்-12) மொத்தம் 10,548 போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் பொது நடவடிக்கைப் படை (பிஜிஏ) மற்றும் அவர்களது மனைவிகள் முன்னதாக டிசம்பர் 14 ஆம் தேதி அன்று வாக்களிப்பார்கள் என்று சரவாக் காவல்துறை ஆணையர் டத்தோ அய்டி இஸ்மாயில் தெரிவித்தார்.
அவர்கள் வாக்களிக்க இலகுவாக 111 வாக்குச் சாவடிகளுடன் கூடிய 85 ஆரம்ப வாக்குப்பதிவு மையங்கள் செயல்பாட்டில் இருக்கும் என்றார்.
“கன்டிஜென்ட் போலீஸ் தலைமையகம் (ஐபிகே), மாவட்ட காவல்துறை தலைமையகம் (ஐபிடி), போலீஸ் குடும்ப சங்கம் (பெர்கேப்), வள மையம், பொழுதுபோக்கு அறை, கூட்ட அறை மற்றும் பள்ளி ஆகியவை தேர்தல் மையங்களாக செயல்படும் ,” என்று அவர் கூறினார்.
சரவாக் பொது நடவடிக்கைப் படையின் (PGA) தலைமையகத்தில் இன்று பதுகாவிலுள்ள சிவில் கலக நடவடிக்கை பிரிவு (PORU) மற்றும் நீர் பீரங்கிப் பிரிவு ஆகியவற்றின் சிறப்பு அணிவகுப்பினைக் கண்ட பின்னர், செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
PRN-12 காலப்பகுதியில் எதிர்பாராத சூழ்நிலைகளைத் கையாளுவதற்காகவே இப்படைப்பிரிவினருக்கு தொடர்ச்சியான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் இந்தத் தேர்தலுக்காக, நான்கு அதிகாரிகள் மற்றும் 188 உறுப்பினர்களைக் கொண்ட நான்கு PORU அணிகளுடன் நாங்கள் தயாராகி வருகிறோம் என்றும் அவர் கூறினார்.
இதுவரை, நிலையான செயல்பாட்டு நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) முரணான செயல்களை எந்தக் கட்சியோ அல்லது நபர்களோ செய்யவில்லை என்பதை தங்களது உறுப்பினர்கள் கண்காணித்து வருவதாகவும் அதேநேரத்தில் “எஸ்ஓபிகள் பின்பற்றப்படுகிறதா என்பதை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதே நேரத்தில், எஸ்ஓபிகளை மீற வேண்டாம் என்று தங்கள் ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்த போட்டியிடும் வேட்பாளர்களின் ஒத்துழைப்பை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.




















