மலேசியக் குடும்பம் 100 நாள் அபிலாஷைகள் தினம்; 10,000 வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன

கோலாலம்பூர், டிசம்பர்.8-

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் சிந்தனையில் உதயமான மலேசியக் குடும்பம் 100 நாள் அபிலாஷைகள் தினம் கொண்டாட்டத்திற்கு எஞ்சியிருப்பது இன்னும் 1 நாள் மட்டுமே.

நாட்டின் 9ஆவது பிரதமராகப் பதவியேற்ற பின் ஒவ்வோர் அமைச்சருக்கும் 100 நாள் அவகாசம் தந்து, அதன் அடைவு நிலையை நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 31 அமைச்சர்களும் அவர்களின் 100 நாள் அடைவு நிலையைப் பொதுமக்களுக்கு அறிவிக்க உள்ளனர்.

ஒவ்வோர் அமைச்சரின் செயல்பாடுகளும் அவர் சார்ந்த அமைச்சு, இலாகாக்களின் அடைவு நிலை, தலைமைத்துவம், பொதுமக்களின் உணர்தல் போன்ற மூன்று பிரதான அம்சங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும்.

மலேசிய வரலாற்றில் முதல் முறையாக ஒரே கூரையின் கீழ் அனைத்து அமைச்சுகளும் இலாகாக்களும் ஏஜென்சிகளும் பிரதமரின் உத்தரவை நிறைவேற்றக் காத்திருக்கின்றன.

நாளை 2021, டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 12ஆம் தேதி வரை 4 தினங்களுக்கு கோலாலம்பூர் கொன்வென்ஷன் செண்டரில் (கேஎல்சிசி) இந்தப் பிரமாண்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் டிசம்பர் 9ஆம் தேதி பிற்பகல் 2.00 மணிக்கு அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைக்கிறார்.

உயர்கல்வி வாய்ப்புகள்

இந்த நான்கு நாள் நிகழ்ச்சியில் பொதுமக்கள் பயன்பெறுவதற்காகப் பல்வேறு நிகழ்ச்சிகளும் வாய்ப்புகளும் ஏற்பாடு செயப்பட்டுள்ளன. பல்வேறு உயர்கல்வி மையங்கள் பங்கேற்று அவை வழங்கக்கூடிய உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து விளக்கம் அளிக்க முகப்பிடங்களை அமைத்துள்ளன.

எஸ்பிஎம், எஸ்டிபிஎம் முடித்த மாணவர்கள் அவற்றின் முடிவுகளோடு இந்த உயர்கல்வி முகப்பிடங்களுக்குச் சென்று விருப்பத் தேர்வுகளை முடிவுசெய்யலாம்.

கல்வி உபகாரச் சம்பளம், கல்விக் கடன் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உடனுக்குடன் பெறலாம். சான்றிதழ், டிப்ளோமா படிப்பு முடித்தவர்களும் இளங்கலைப் பட்டப்படிப்பு வாய்ப்புகளைத் தேர்வுசெய்யலாம்.

10,000 வேலை வாய்ப்புகள்

அதேபோல் 50 பல்வேறு நிறுவனங்கள் 10,000 வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. வேலை இல்லாதவர்கள், வேலை இழந்தவர்கள், வேலை தேடுவோர் இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் நேர்முகத் தேர்வுக்கு ஆஜராகி வேலைக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

புதிய பட்டதாரிகளும் இந்த நேர்காணலில் பங்கேற்கலாம். பரிவுமிக்க அரசாங்கம் மக்களின் தேவைகளை அறிந்து இந்த உரிய வாய்ப்புகளைத் தயார் செய்துள்ளது.
கார்னிவெல் கெர்ஜாயா கெலுவார்கா மலேசியா என்ற தலைப்பில் நடைபெறும் இந்த வேலை வாய்ப்புகளை இந்திய சமுதாய இளைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார்.

சம்மன்களுக்குக் கழிவு

பல்வேறு சாலைக் குற்றங்களுக்கான போலீஸ், ஜேபிஜே சம்மன்களுக்குக் கழிவு வழங்கும் முகப்பிடங்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட சில குற்றங்களுக்கு ஆச்சரியம் தரக்கூடிய கழிவுகளை சம்பந்தப்பட்டவர்கள் பெறலாம். இவர்களுக்கு விளக்கம் தந்து தேவையான உதவிகள் வழங்குவதற்கு போலீஸ், ஜேபிஜே அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கின்றனர்.

எஸ்ஓபி விதிமுறைகள்

இந்தப் பிரமாண்ட நிகழ்ச்சியைக் காண்பதற்கு நேரில் வரும் வருகையாளர்கள், ஏற்பாட்டாளர்கள் விதித்திருக்கும் கடுமையான எஸ்ஓபி விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

நுழைவாயிலில் உடல் உஷ்ணத்தைப் பரிசோதிப்பது, மைசெஜாத்ராவில் உள்ள 2 தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டதை உறுதி செய்யும் டிஜிட்டல் சான்றிதழைக் காட்டுவது, எல்லா நேரத்திலும் முகக்கவசம் அணிவது ஆகியவை தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் உத்தரவுக்கு உட்பட்டு கண்டிப்பாக அனுசரிக்கப்பட வேண்டும்.

இந்த எஸ்ஓபி விதிமுறைகள் குறித்து மண்டபத்தில் அடிக்கடி அறிவிப்புச் செய்யப்படும். தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக மண்டபத்தில் உள்ள பிரத்தியேக அறையில் தனிமைப்படுத்தப்படுவர்.

திரண்டு வாருங்கள், பலன்களைப் பெறுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here