புத்ராஜெயா – இந்தியாவின் சர்சைக்குரிய மதப்போதகர் ஸாகிர் செய்திருந்த போலீஸ் புகார் தொடர்பில் மனிதவள அமைச்சர் எம். குலசேகரனிடம் நேற்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
தமக்கு எதிராக மலேசியாவில் குலசேகரன் வெளியிட்ட 2 அறிக்கைகள் அவதூறானவை எனக் கூறி ஸாகிர் போலீசில் புகார் செய்திருந்தார். இந்தப் புகார் தொடர்பில் குலசேகரனிடம் போலீசார் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். புக்கிட் அமான் டி 5 குற்றப்புலனாய்வுத் துறையைச் சேர்ந்த டிஎஸ்பி ஆனந்தன் ராஜு, இந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்.
அமைச்சரின் வழக்கறிஞர் விமல் அரசனும் உடனிருந்தார். அமைச்சர் குலசேகரன், டிஎஸ்பி ஆனந்தன் ராஜுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கினார். புத்ராஜெயாவில் உள்ள குலசேகரன் அலுவலகத்திற்குச் சென்ற டிஎஸ்பி ஆனந்தன் ராஜு, கிட்டத்தட்ட 2 மணி நேரம் வரை வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். தாம் அவதூறு அறிக்கையை வெளியிட்டதாக ஸாகிர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை குலசேகரன் மறுத்துள்ளார். ஸாகிரை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் எனவும் அவர் கூறியிருந்தார்.