ஒவ்வொரு மனிதனும் மேற்கொள்ளும் இன்ப- துன்பங்கள், பிரிவினைகள், விபத்துக்கள் அனைத்திற்குமே முற்பிறவி கர்மாவே காரணம். அத்தகைய கர்மவினையைப் போக்க, பூஜை மற்றும் வழிபாடுகளால் முடியும் என்பது காலம், காலமாக ஆன்மிக சான்றோர்களால் சொல்லப்பட்டு, நம்பப்பட்டு வருகிறது.
நாம் முற்பிறவியில் செய்த பாவங்கள், பெற்ற சாபங்கள் அனைத்தும், தீர்த்தவாரியில் கலந்துகொண்டு நீராடுவதன் மூலம் தீரும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் பக்தவச்சலப் பெருமாள் என்று அழைக்கப்படும் வியதபாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தின் மண்டபத்தில் மகாபாரதம் அருளிய வியாசர் வாழ்ந்து வருவதாக ஐதீகம். ஒருவரின் ஆன்மா சாந்தியடைய, முற்பிறவி பாவங்கள் தீர, வியாச முனிவர் குறிப்பிட்ட 12 திருத்தலங்களில் இந்த தலம் முதன்மையானதாகும்.
இந்த திருத்தலம் முற்பிறவி சாபங்கள், பாவங்கள் போன்ற அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் தலமாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வியதீபாத நித்ய யோக நாளில் தீர்த்தவாரி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை 5.30 மணிக்கு திருக்கோவிலில் இருந்து பெருமாள், பக்தர்கள் புடைசூழ புறப்பட்டு, தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி காண்கிறார். மிகவும் கோலாகலமாக நடக்கும் தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பெருமாளுடன் நீராடுகின்றனர்.
இந்த தீர்த்தவாரியின் போது, தாமிரபரணி ஆற்றில் நீராடுவதன் மூலம் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்குவதாகவும், நம் குடும்பத்தில் மறைந்த ஆன்மாக்கள் சாந்தி அடைவதாகவும், பிறவியில்லாத நிம்மதி கிடைக்கும் என்பதும் ஐதீகமாக இருக்கிறது.