புத்ராஜெயா –
உயிர்க்கொல்லி நோய் மோசமாகப் பரவியதை அடுத்து சீனாவில் இருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் தடை விதிப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.
சீனாவில் உள்ள ஹுபே மாநிலத் தலைநகர் வுஹானில் கொரோனா வைரஸ் என்ற விஷக் காய்ச்சல் பரவியது. இப்போது வுஹான் நகரைத் தவிர்த்து சீனாவின் எல்லாப் பகுதிகளிலும் அந்த நோயின் தொற்றுக் கிருமிகள் பரவிவிட்டன என்று ஆகக்கடைசிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சீனாவில் இருந்து வருகின்ற விமானங்களுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்படுகிறது என்று சபா மாநில அரசாங்கம் நேற்று முன்தினம் அறிவித்தது.
இது குறித்து கருத்துரைத்தபோது, வுஹானில் இருந்தும் ஹுபே மாநிலத்தில் இருந்தும் வருகின்ற விமானங்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக சீனாவில் இருந்து வருகின்ற எல்லா விமானங்களுக்கும் தடை விதிப்பது பற்றி அரசாங்கம் ஆராய்வதாக மகாதீர் தெரிவித்தார்.
அதேவேளையில், வுஹான் நகரில் சிக்கிக் கொண்டிருக்கும் 78 மலேசியர்களைப் பாதுகாப்பாக மீட்பது தொடர்பாகவும் சீன அரசாங்கத்துடன் பேச்சு நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றார் அவர்.