ஜோகூர்பாரு –
கொரோனா வைரஸ் விஷக்காய்ச்சல் காரணமாக ஓர் ஆரம்பப்பள்ளி மூடப்பட்டதாகக் கூறப்படுவது உண்மையல்ல என்று ஜோகூர் மாநில சுகாதார இலாகா தெரிவித்தது.
ஜோகூர் பாருவிலுள்ள ஓர் ஆரம்ப சீனப்பள்ளியை மூடும்படி நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று அந்த இலாகாவின் இயக்குநர் டாக்டர் அமான் ரபு கூறினார்.
கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து வந்த மலேசியப் பிரஜை ஒருவர் சளிக்காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்தார் என்று தெரிகிறது. அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.
அவரின் குடும்பத்தைச் சேர்ந்த சில பிள்ளைகள் அந்த ஆரம்பச் சீனப்பள்ளியில் பயின்று வருகின்றனர். அவர்களுக்கும் அந்த வைரஸ் தொற்றியிருக்கலாம் என்று முகநூலில் வெளியான செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தின.
அந்தப் பிள்ளைகள் வழக்கம்போல் பள்ளிக்கு வந்தால் மற்ற மாணவர்களுக்கும் அந்த நோய் தொற்றிக் கொள்ளலாம் என்ற அச்சம் காரணமாகப் பள்ளியை மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக முதநூலில் செய்திகள் பரவின. ஆனால் இது உண்மையல்ல என்றார் டாக்டர் அமான்.





















