லண்டன் –
இங்கிலீஷ் பிரிமியர் லீக் கிண்ணப் போட்டியில் தோல்வியில் இருந்து மீண்டிருக்கும் அர்செனல் – மென்செஸ்டர் யுனைடெட் கிளப்புகள் நேற்று அபார வெற்றியைப் பெற்றுள்ளன.
எமிரெஸ்ட் அரங்கில் நடந்த ஆட்டத்தில் அர்செனல் 3-2 என்ற கோல்கணக்கில் எவர்ட்டனை தோற்கடித்தது. முதல் நிமிடத்திலேயே எவர்ட்டனின் கோலை லெனின் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
சளைக்காமல் விளையாடிய அர்செனல் முதல் கோலை 27ஆவது நிமிடத்தில் நிக்கோல் நிகிதா அடித்தார். பின்னர் 33,46ஆவது நிமிடங்களில் மேலும் இரு கோல்களை அபாமெயங் போட்டார்.
எவர்ட்டனின் 2ஆவது கோலை 47ஆவது நிமிடத்தில் ரிச்சல் அடித்தார். இருப்பினும் அர்செனல் 3-2 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியால் 26 ஆட்டங்களை முடித்திருக்கும் அர்செனல் 37 புள்ளிகளுடன் 9ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பின்னர் நடந்த மற்றோர் ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 3-0 என்ற கோல்கணக்கில் வாட்போர்ட்டை வீழ்த்தியது.
42ஆவது நிமிடத்தில் முதல் கோலை புருணோ பெர்னாண் டஸ் அடித்தார். 58ஆவது நிமிடத்தில் 2ஆவது கோலை அந்தோணியோ மார்ஷெலும் 75ஆவது நிமிடத்தில் 3ஆவது கோலை கிரிண்வூட்டும் அடித்தனர்.
இந்த வெற்றியால் மென்செஸ்டர் யுனைடெட் 41 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இங்கிலீஷ் பிரிமியர் லீக்கில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் கிளப்புகள் மட்டுமே சாம்பியன்ஸ் லீக் கிண்ணப் போட்டிக்கு முன்னேறும். அடுத்து வரும் ஆட்டங்களில் மென்செஸ்டர் தொடர் வெற்றியைப் பெற்றால் வாய்ப்பு கிட்டலாம்.