புதுடில்லி –
புதுடில்லியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் ஒரு காவலர் உட்பட 5 பேர் பலியாகியுள்ளதாகவும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடில்லி ஷாகின் பாக் என்ற பகுதியில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது சிஏஏக்கு ஆதரவாக ஒரு சிலரும் களத்தில் குதித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் மற்றும் பிரச்சினை ஏற்பட்டது.
இதன் காரணமாக ஏற்பட்ட கலவரம் காரணமாக அங்கிருந்த பொதுமக்களின் வீடுகள் மற்றும் காவல் வாகனங்கள் பள்ளி வாகனங்கள் ஆகியவை தீக்கிரையாக்கப்பட்டன. இதனையடுத்து நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5 பேர் பலியாகினர்.
போராட்டக்காரர்களில் ஒருவர் துப்பாக்கியை எடுத்து சுட்டதாகவும் அதில் ஒரு காவலர் பலியானதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் புதுடில்லியில் தனியார் பள்ளிகள் அனைத்தும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதல் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் நிலையில் இது போன்ற மோதல் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.