கோலாலம்பூர்:
14 நாட்கள் கடையடைப்பு எங்களுக்கு சுமையை நிச்சயம் கொண்டு வரும். ஆனால் நாட்டு மக்களின் நன்மைக்காக மலேசிய இந்திய சிகை அலங்கார நிலைய உரிமையாளர் சங்கம் (மிண்டாஸ்) கீழ் செயல்படும் சிகை அலங்கார கடைகள் இன்று 18.3.2020 தொடங்கி வரும் 31.3.2020 வரை செயல்படாது என்று சங்கத்தின் செயலாளர் ராஜசேகரன் தெரிவித்தார்.
கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக நேற்று முன்தினம் பிரதமர் மொகிதீன் யாசின் அறிவிப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் எங்கள் சங்கத்தின் கீழ் செயல்படும் அனைத்து கடைகளும் செயல்படாது.
ஏற்கெனவே தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினையை எதிர்நோக்கி வரும் எங்களுக்கு இது மேலும் சுமையை ஏற்படுத்தும் என்றாலும் அதிகமானோர் தொற்று நோய்க்கு ஆளாக கூடாது என்ற நோக்கில் இதனை ஏற்று செயல்படுத்துவதாகக் கூறினார்.
இந்த 14 நாட்களுக்கு எங்கள் பணியாளர்களுக்கு உணவு தங்குமிட வசதிகளை வழங்க முடியும். ஆனால் முதலாளிகளாகிய எங்களுக்கே வருமானம் இல்லாத போது எங்களின் பணியாளர்களுக்கு எவ்வாறு சம்பளம் வழங்குவது என்பதே தற்பொழுதைய பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது என்று ராஜசேகரன் வேதனையோடு தெரிவித்தார்.