புதுடெல்லி,மார்ச் 22-
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவியுள்ளது.
உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 7 ஆயிரத்து 725 பேருக்கு இந்த வைரஸ் வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. இந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 ஆயிரத்து 825 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, இத்தாலி நாட்டில் கல்வி பயின்றுவரும் இந்திய மாணவர்கள் பலர் கொரோனா வைரஸ் காரணமாக நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இதையடுத்து, அந்த மாணவர்களை மீட்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது.
இதற்காக ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த தனி (787 டிரீம்லைனர்) விமானம் நேற்று மதியம் 2.30 மணிக்கு டெல்லியில் இருந்து ரோம் நகருக்கு புறப்பட்டு சென்றது.
இந்நிலையில், இத்தாலியின் ரோம் நகரில் சிக்கித்தவித்த 263 இந்திய மாணவர்கள் இன்று விமானம் மூலம் டெல்லி அழைத்துவரப்பட்டனர்.
நாடு திரும்பிய அனைவருக்கும் கொரோனா வைரசுக்கான முதல்கட்ட பரிசோதனை செய்யப்பட்டு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவ முகாமுக்கு அழைத்து செய்யப்பட்டனர்.
























