கோலாலம்பூர், மார்ச் 24-
அரசாங்கம் அமல்படுத்தியுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டுத் தடை உத்தரவு காலகட்டத்தில் சிறு வர்த்தகங்களுக்கு உதவவும் மலேசியர்கள் அவர்களின் சிறு தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும் கிரேப் மலேசியா (RAB MALAYSIA) நிறுவனம் சில திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.
அவ்வகையில் ‘Grabfood TAPAU’ என்ற பொட்டல உணவுத் திட்டம் நேற்று தொடங்கி செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாடிக்கையாளர்கள் உணவகங்களிருந்து உணவுகளை முன்கூட்டியே ஆர்டர் செய்துவிட்டு இணையம் வழி கட்டணம் செலுத்திக் காத்திருக்காமல் பெற்றுச் செல்லலாம்.
அதனைத் தொடர்ந்து ‘Launching Pasar’ என்ற திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே உள்ள இந்நிறுவனத்தின் ‘Grabmart’ திட்டத்தின் விரிவாக்கமாகும். இதன் வாயிலாக புதிய காய்கறிகள், இறைச்சி – மீன் வகைகள் தருவிக்கப்படும்.
தற்போது இத்திட்டம் திதிடிஐ பசாரில் அமல்படுத்தப்பட்டுள்ளது. கூடியவிரைவில் பல இடங்களுக்கு விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என கிரேப் நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாளை தொடங்கி பினாங்கு, ஜோகூர் பாரு, ஈப்போ, மலாக்கா, கோத்தா கினபாலு, கூச்சிங் ஆகிய இடங்களிலும் “Grabmart” திட்டம் செயல்படவுள்ளது.
மேலும் ஏற்கெனவே உள்ள வியாபாரங்களுக்கு உதவும் வகையில் இலவச விநியோகம்,“GrabFood” சேவை உணவங்களுக்கு 30 விழுக்காடு கழிவு மற்றும் “Grabmart” சார்ந்த அவசிய சுகாதாரப் பொருட்களுக்கு 50 விழுக்காடு கழிவுகள் வழங்கப்படும்.
இதன் வழி விநியோக பங்காளிகள் மற்றும் கடைகள் என இரு தரப்பினரும் இந்தத் சூழ்நிலையில் முடிந்த வரை வருமானம் ஈட்ட முடியும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்த மேல் விவரங்கள் அறிய கிராப் செயலியை வலம் வரலாம்.