கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக் போட்டிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. போட்டிகள் இனிமேல் எப்போது தொடங்கும் என்பதை உறுதியாக கூறு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு கிளப்புகளிலும் விளையாடும் முன்னணி வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவார்கள். போட்டி நடைபெறவில்லை என்றாலும் அவர்களுடைய ஒப்பந்தத்தின்படி சம்பளம் கொடுக்க வேண்டும். இதனால் கிளப்புகள் மிகப்பெரிய இழப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இந்த இழப்பை ஈடுகட்டும் வகையில் வீரர்களின ஊதியத்தில் பிடித்தம் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது, ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா லீக்கில் பார்சிலோனா கிளப்புக்காக விளையாடும் நட்சத்திர வீரர் மெஸ்சி ஊதிய குறைப்பு முடிவுக்கு சம்மதம் தெரிவித்தார். இந்நிலையில் ரியல் மாட்ரிட் அணியின் வீரர்கள் 20 சதவீத ஊதிய குறைப்பு ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஏற்கனவே லா லிகாவில் விளையாடும் நான்கு அணி வீரர்கள் ஊதிய குறைப்பை ஏற்றுக் கொண்ட நிலையில் ஐந்தாவது ரியல் மாட்ரிட் வீரர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
லீக்குகள் இத்துடன் முடிவடைந்தால் 20 சதவீத ஊதியமும், சூழ்நிலை நன்றாகிய பின் போட்டிகள் நடைபெற்றால் 10 சதவீத ஊதியமும் பிடித்தம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.