கோலாலம்பூர், ஏப்.14-
நடமாட்டக் கட்டுப்பாட்டை முன்னிட்டு அரசாங்கம் வழங்கும் ‘பந்துவான் பிரிஹாத்தின் நேஷனல்’ உதவி நிதி அனைத்து மக்களுக்குமாக சரிசமமாக இயக்கப்படுகிறதா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
ஒரு குடும்ப வருமானம் 4ஆயிர வெள்ளிக்குக் குறைவாக இருப்பின் 1,600 வெள்ளி வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருக்கும் நிலையில் ஆன் லைன் மூலமாக விண்ணப்பிக்கும்போது குடும்ப வருமானம் 2 ஆயிரம் வெள்ளிக்கும் குறைவாக இருக்கும் நிலையில், 500 வெள்ளி என்றும் 800 வெள்ளி என்றும் வழங்கப்படும் என முடிவுகள் காட்டுவதால் மக்கள் குழப்பமடைந்து வருகின்றனர்.
கிளந்தான் பாஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு 1,600 வெள்ளி வழங்கப்படுவதாக பிரிஹாத்தின் மின்னியல் முடிவுகள் காட்டுவது வியப்பை ஏற்படுத்துவதாகவும் மக்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டனர்.
கொரோனா காலத்தில் இப்படியோர் முரண்பாடு இருக்குமாயின் இதர காலங்களில் எப்படி இருக்கும் என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
‘பந்துவான் பிரிஹாத்தின் நேஷனல்’ முறையாக இயங்குகிறதா என்பது குறித்து அரசாங்கம் சோதனை நடத்தும் அவசியம் இருப்பதாகவும் மக்கள் கருதுகின்றனர்.