எம்சிஓ காலக்கட்டம் முடிவடையும் முன்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும் தளர்வு காலத்தில் அதிக மக்கள் கூட்டம் கூடும் இடமாக வங்கிகளும் அடகுக் கடைகளும் இருக்கின்றன என்ற தகவல் நம்மில் பலர் அறிவர்.
அடகுக்கடைகள் திறக்கப்பட வேண்டும் என்று பலரின் கோரிக்கைக்கு விடை வழங்கும் வகையில் நேற்று 4ஆம் தேதி தொடங்கி அடகுக்கடைகள் இயங்க தொடங்கியிருக்கின்றன. மார்ச் 18ஆம் தேதி தொடங்கி மே3 ஆம் தேதி அடகுக்கடை ரசீதுகளுக்கு வட்டி கட்டவோ அல்லது நகைகளை மீட்டெடுக்கவோ பலர் நினைத்திருந்தாலும் நடமாட்டக் கட்டுப்பாட்டு காரணமாக அதற்கு காலமும் நேரமும் வாய்ப்பு வழங்கவில்லை என்பதே நிசர்தனமான உண்மை.
அடகுக்கடைகளில் இருக்கும் அடகு காலக்கெடு முடிந்த நகைகளை மீட்டெடுக்க கையில் பணம் இருந்தாலும் அடகுக் கடைகள் திறக்கப்படாததால் அதற்கான சாத்தியம் இல்லாமல் போனது.
காலக்கெடு முடிவடைந்த நகைகள் குறித்து பலர் கவலைக்கொண்டிருந்த வேளையில் வங்கியில் நிலுவையிலுள்ள கடன்களுக்கு 6 மாதகாலத்திற்கு மாதந்திர தவணை செலுத்த வேண்டாம் என்றும் அக்காலக்கட்டத்தில் வட்டி விதிக்கப்படாது என்று பேங்க் நெகாரா அறிவித்திருந்தது அனைவரும் சற்று நிம்மதி பெருமூச்சை வரவழைத்தது.
ஆனால் அடகுக்கடைகளில் வசூலிக்கப்படும் வட்டி விகிதம் மிகவும் வேதனையளிக்கும் விஷயமாக இருப்பதாக பெயர் குறிப்பிடாத பலர் குறிப்பிட்டனர். உதாரணமாக மார்ச் 20ஆம் தேதி நகையின் காலகெடு முடிந்தால் அசல் தொகையுடன் 6 மாதக்கால வட்டித் தொகையை செலுத்தினால் போதுமானது. மார்ச் 20ஆம் தேதி காலக்கெடு முடிவடைந்திருந்தால் அசலுடன் 6 மாத வட்டியை செலுத்தி நகையை மீட்டெடுக்க முடியும். ஆனால் மார்ச் 18இல் தொடங்கிய எம்சிஓவால் எதுவும் செய்ய இயலாமல் போனது. மே 4ஆம் தேதி அடகுக்கடைகள் திறந்தவுடன் நகையை மீட்டெடுக்க கேட்கும்போது ஏப்ரல், மே மாதம் உள்ளிட்ட இரண்டு மாதங்களுக்கு சேர்த்து 8 மாத வட்டியை செலுத்தினால் தான் நகையை திருப்ப முடியும் என்று அடகுக்கடை உரிமையாளர்கள் கூறியபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
வயிற்றை கட்டி வாயைக் கட்டி நமக்கும் நம் சந்ததியினருக்கும் உதவும் என்ற நோக்கிலும் அதே நேரத்தில் அவசரக் காலத்திற்கு அடகுக் கடைகளில் வைக்க உதவும் என்று நகைகளை வாங்கி எங்களின் கஷ்டகாலத்தில் அடகு வைத்தால் எங்கள் வயிற்றில் அடிக்கும் விதமாக வட்டி வசூலிப்பதை அரசாங்கம் கவனித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.