குஜராத் மாநிலம் சூரத்தில் ரயிலில் ஏறிய புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உத்தரகாண்ட் மாறிலம் ஹரித்துவார் வந்தனர். அந்த ரயிலில் 167 பயணிகளை காணவில்லை. இது எப்படி நடந்தது என்று மர்மமாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சிறப்பு ரயில்கள் மூலம்சொந்த ஊருக்கு மத்திய அரசு அனுப்பி வைத்து வருகிறது.
அந்த வகையில் குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு 1,340 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஷராமிக் சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் வந்த ரயில் வெள்ளிக்கிழமை ஹரித்துவார் வந்தது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக ரயிலில் வந்த பயணிகளை இறக்கி பரிசோதிக்க அந்த மாவட்ட அதிகாரிகள் முடிவு செய்தனர். அப்போது பயணிகளை எண்ணிய போது சுமார் 167 பயணிகளை காணவில்லை. 1,173 பேர் மட்டுமே ரயில் இருந்து இறங்கினர். அதாவது. சூரத்தில் ரயிலில் ஏறிய பயணிகளின் எண்ணிக்கை ஹரித்வார் வந்த பயணிகளின் பட்டியலுடன் பொருந்தவில்லை. இந்த தகவலை ஹரித்துவார் மாவட்ட ஆட்சி தலைவர் ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்திற்கு மே 11ம் தேதியில் இருந்து சிறப்பு ரயில்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துக்கொண்டு வந்துள்ளன.
அப்படி வந்தவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 78 ஆக உள்ளது . உதம் சிங் நகர் மாவட்டத்தில் இருந்து இந்த கேஸ்கள் அனைத்தும் பதிவாகி உள்ளது. மும்பையின் அந்தேரியிலிருந்து 35 வயது மற்றும் 36 வயதுடைய இரண்டு ஆண்களும், டெல்லியைச் சேர்ந்த 10 வயது சிறுமியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது சோதனையில் தெரியவந்ததாக உத்தரகாண்ட் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.