செலாயாங் பாசார் போரோங்கில் அந்நியர்கள் களையெடுக்கப்பட்ட பின்னர் உள்ளூர் வாசிகளுக்கு வேலை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக அரசாங்கம் கூறி வருகிறது.
உள்ளூர் வாசிகளுக்கு நாள் ஒன்றுக்கு 100 வெள்ளி சம்பளம் என கூறப்படுகிறது. ஆனால் இந்த வாய்ப்பு இன்னும் இளைஞர்களளை கவராதது ஏன் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
அச்சந்தையில் பல தரப்பட்ட வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக அந்நியர்கள் இத்தனை காலம் செய்து வந்த அனைத்து வேலைகளையும் தற்போது உள்ளூர் வாசிகள் செய்ய வேண்டும். தற்போது 1,500 மலேசிய இளைஞர்கள் அங்கு வேலை செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட 2,500 அந்நியர்கள் அங்கிருந்து களையெடுக்கப்பட்டுள்ளனர் என்று கூட்டரசு அமைச்சு தெரிவித்துள்ளது. முறையான ஆவணங்களை கொண்டிருக்கும் சில அந்நியர்கள் மட்டும் அங்கு வேலை செய்கின்றனர்.
உள்ளூர் வாசிகள் அங்கு வேலை மட்டும் செய்யாமல் அங்குள்ள தொழில்துறைகளில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் எச்ஆர்டிஎஃப் மூலம் பயிற்சிகளை வழங்க அரசாங்கம் பேச்சு நடத்தி வருகிறது.
இளைஞர்கள் என்ன எதிர்பார்க்கின்றனர்? அவர்களுக்கு ஏற்ற சம்பளம், வேலை நேரம், ஊழியர் சேம நிதி போன்ற அடிப்படை விஷயங்களை மட்டுமே அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த கோவிட் பெருந்தொற்று காலக்கட்டத்தில் நாட்டில் பல இளைஞர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பலர் நீண்ட காலமாக வேலை இல்லாமல் தத்தளித்து வருகின்றனர். இவையெல்லாம் அரசாங்கம் கருத்தில் கொண்டு அவர்களுக்கு எந்த வகையில் உதவ போகிறது?
இன்றைய சூழலில் இளையோர்கள் அவர்களுக்கு பிடித்த வேலை துறைகளை தேர்ந்தெடுத்து வேலை செய்து வருகின்றனர். சந்தையில் செய்யக் கூடிய வேலைகள் கஷ்டமாக இருக்குமோ என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதா?
இச்சந்தையில் உள்ளூர் வாசிகளை வேலைக்கு அமர்த்த அரசாங்கம் எவ்வித சலுகைகளை வழங்க போகிறது?
உள்ளூர் வாசிகள் இந்த வேலையை தேர்வு செய்யாததற்கு இபிஎஃப் முதன்மை காரணமாக இருக்கிறது என்று அங்குள்ள வியாபாரிகள் தெரிவித்தனர். வேலை என்றால் இபிஎஃப் அடிப்படையானது. அந்த சலுகையை இளைஞர்களுக்கு வழங்கினால் அதிகமான இளைஞர்கள் இங்கு வேலை செய்வதற்கு சாத்தியம் உள்ளதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதோடு அந்நியர்கள் களையெடுக்கப்பட்ட பின்னர் இங்கு வேலை செய்ய ஆள் இல்லாமல் முதலாளிகளே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு 10 கைகள் இல்லை எல்லா வேலையையும் நாங்களே செய்வதற்கு. நிலைமை மோசமடைவதற்குள் அரசாங்கம் எங்களுக்கு உதவ வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
பாசார் போரோங் இனி மலேசியர்களுக்கே என்று கூட்டரசு பிரதேச அமைச்சு கூறி வந்தாலும் எந்த மாதிரியான திட்டங்களை அரசாங்கம் கையாளப் போகிறது. குறிப்பாக இளைஞர்களை கவரக் கூடிய வகையில் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது.
கோவிட் காலக்கட்டத்தில் அங்குள்ள அந்நியர்களை களையெடுத்தது வரவேற்க கூடியது தான். ஆனால் அங்கு மலேசியர்களை நிரப்ப என்ன வழி செய்ய போகிறது அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.