முறையான ஆவணம் இன்றி நாட்டிற்குள் நுழைந்து, கோவிட் 19 தொற்று ஏற்பட்டிருக்கும் அந்நிய நாட்டினரை தனிமை படுத்த மேலும் இரு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செர்டாங் மேப்ஸை தவிர்த்து சுங்கை பூலோ குஸ்தா மருத்துவமனை, கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் பழைய பிரசவ கட்டடம் என இரு இடங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. இந்த இரு மருத்துவமனைகளிலும் கிட்டத்தட்ட 1,430 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என நம்புவதாக தற்காப்பு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்தார்.
அதோடு, கோவிட் 19 தொற்று ஏற்படாத சட்டவிரோத அந்நியர்களை அவரிகளின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப அரசாங்கம் முடிவெடுத்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார். சம்பந்தப்பட்ட நாடுகளில் தூதர்களிடம் பேச்சு நடத்தி அவர்களை நாடு கடத்தும் பணியை அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கிறது.
இதனிடையே, செமினி, புக்கிட் ஜாலில், கே.எல்.ஐ.எ ஆகிய மூன்று குடிநுழைவுத் துறையின் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சட்டவிரோத குடியேறிகள் அனைவருக்கும் கோவிட் 19 சோதனை மேற்கொள்ளப்படும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.