ரொட்டி, தோசை.. இப்படி பல உணவுகளுக்கு ஜாம்தான் சிறுவர்களின் முதல் தேர்வாக இருக்கும். நாமே வீட்டில் சுவையான, சத்தான பழங்களில் ஜாம் தயாரிக்கலாம். குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இன்று அன்னாசி பழ ஜாம் செய்வது எப்படியென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
முற்றிப் பழுத்த அன்னாசி – 1
தக்காளிப் பழம் – 4
கறுப்புச் சீனி – 500 கிராம்
முந்திரிப்பருப்பு – 50 கிராம்
ப்ளம்ஸ் – 50 கிராம்
செய்முறை:
அன்னாசிப் பழத்தின் தோலை சீவி நடு தண்டை அகற்றி சின்னதாக வெட்டி அரைத்துக்கொள்ளவும்.
தக்காளிப் பழத்தை கொதி நீரிட்டு மூடி வைத்து தோலுரித்து அதனையும் அரைத்துக்கொள்ளவும்.
அடி தடிப்பான பாத்திரத்தில் இரண்டையும் கலந்து வற்றக் காய்ச்சவும்.
நன்றாக வற்றியதும் சீனியை இட்டு வற்ற விடவும். அடித்தடிப்பான பாத்திரமென்றால் அடிக்கடி கிளர தேவைப்படாது.
நன்றாக இருகி வரும் போது நட்ஸ், பிளம்ஸ் தூவி வைக்கவும்.
அன்னாசிப் பழ ஜாம் தயார்.