செந்தூல், ஆக. 4-
70 வயது நிரம்பிய சொந்த தாயை அடித்துக் கொலை செய்த மகனை காவல் துறையினர் கைது செய்தனர்.
இச்சம்பவம் ஜிஞ்சாங் ஸ்ரீ அமான் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்தது என்று செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சண்முக மூர்த்தி தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து அங்கு விரைந்த போலீஸார், அந்த மூதாட்டியின் உடலை பரிசோதனை செய்ததில் அவரின் கை, கண்கள் வீக்கத்துடன் காணப்பட்டன. அதோடு கால்களில் காயங்கள் ஏற்பட்டிருந்தன. தலையில் தாக்கிய அடையாளமும் இருந்துள்ளன என்று அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை மேற்கொண்டதில், கடந்த ஜூலை 31ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் வீட்டிற்கு வந்த மகன் தாய் உறங்கிக் கொண்டிருந்தார். அவரை தூக்கத்திலிருந்து எழுப்பி அடித்து துன்புறுத்தியுள்ளார். அதோடு கூர்மையான ஆயுதங்களை கொண்டு தலையில் தாக்கியுள்ளதாக ஏசிபி சண்முக மூர்த்தி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபர் போதை பொருளை உட்கொண்டிருந்தது தெரிய வந்தது. மேல் விசாரணைக்காக அவர் ஆகஸ்டு 15ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் செக் ஷன் 302 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.









