கிள்ளான்:
இன்று அதிகாலை இங்குள்ள தாமான் ஸ்ரீ இஸ்தானா ஹில்ஸ் (Taman Seri Istana Hills) பகுதியில் உள்ள இரண்டு மாடி மாடிவீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தந்தையும் மகனும் காயமடைந்தனர். இந்த விபத்தில் வீட்டின் 70 விழுக்காடு பகுதி தீக்கிரையானது.
இன்று அதிகாலை 5:23 மணியளவில் தீ விபத்து குறித்த அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஷ்ருல் ரிசால் அஸ்பார் தெரிவித்தார். உடனே தெற்கு கிள்ளான் தீயணைப்பு நிலையத்திலிருந்து வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
“அதிகாலை 5:32 மணிக்கு முதல் தீயணைப்பு வாகனம் ஜாலான் ராஜா ஜுமாட் 17C/KS2-இல் உள்ள அந்த இடத்திற்குச் சென்றபோது, வீடு முற்றிலும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இந்த தீ விபத்தினால் அந்த இரண்டு மாடி வீட்டின் 70 விழுக்காடு கட்டமைப்பு சேதமடைந்துள்ளது.
இச்சம்பவத்தில் 57 வயதுடைய நபருக்கு மணிக்கட்டுகளிலும் தலையிலும் தீக்காயங்கள் (உடலின் 10 விழுக்காடு) ஏற்பட்டுள்ளன. அவரது 28 வயது மகனுக்கு புகை மூட்டத்தினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது,” என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட இருவருக்கும் சம்பவ இடத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், தீயணைப்புத் துறையின் அவசர மருத்துவ மீட்புச் சேவை (EMRS) பிரிவின் மூலம் அவர்கள் கிள்ளான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அருகிலுள்ள தீயணைப்பு நீர்நிலைகளிலிருந்து (Hydrant) தண்ணீரைப் பயன்படுத்தி, அதிகாலை 5:47 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். காலை 7:50 மணியளவில் இந்த மீட்பு நடவடிக்கை முழுமையாக நிறைவடைந்தது. இத்தீயை அணைக்கும் பணியில் 13 வீரர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. தீ விபத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.




















