உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் ரவுடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 42 மாதங்களில் மட்டும் சுமார் 124 ரவுடிகள் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக மீரட்டில் 14 பேரும், முசாபர்நகரில் 11 பேரும் கொல்லப்பட்டு உள்ளனர்.
மாநில அரசு பிராமணர்களை குறிவைத்தே என்கவுண்ட்டர் நடத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் இதை அந்த அறிக்கையில் மறுத்துள்ள போலீசார், இதுவரை கொல்லப்பட்டவர்களில் அதிகபட்சமாக முஸ்லிம்கள் 47 பேர், பிராமணர்கள் 11 பேர், யாதவர்கள் 8 பேர் என கூறியுள்ளனர்.
இத்தகைய கடும் நடவடிக்கை, குற்றவாளிகளுக்கு எதிராக அரசின் சகிப்பின்மையை காட்டுவதாக கூறியுள்ள போலீசார், இது எதிர்காலத்திலும் தொடரும் எனவும் குறிப்பிட்டு உள்ளனர். மேலும் சாதி, மதத்தின் அடிப்படையில் குற்றவாளிகளின் மீது எந்தவித பாகுபாடும் காட்டுவதில்லை எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.