பெட்டாலிங் ஜெயா, ஆக. 20-
வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை பெட்டாலிங் ஜெயா மாவட்டப் போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்னதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு அருகேயுள்ள கார் நிறுத்தும் இடத்தில் தமது கணவருடன் அந்நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
அந்த வாக்குவாதத்தில் அந்நபர் ஆபாச வார்த்தைகளைப் பேசி மிரட்டியதாகவும் அப்பெண் தமது புகாரில் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த வாக்குவாதம் காணொளி தற்போது ங்மூக ஊடகங்களில் பரவி வருகின்றது. புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் அந்த நபர் ஆலயம் ஒன்றின் புதிய நிர்வாகத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
ஆலயப் பதவி விவகாரம் குறித்து இந்த வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரியவருகிறது. இது தொடர்பில் முன்னதாக ஆலயத்தின் பழைய நிர்வாகத் தலைவர் சீபார்க் போலீஸ் நிலையத்திலும் புகார் வழங்கியுள்ளார்.
இதனை அடுத்து நேற்று முன்தினம் அதிகாலை 41 வயது மதிக்கத்தக்க அந்நபரை சீபார்க் பகுதியில் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த இரு கைத்துப்பாக்கிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபருக்குத் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் இருந்ததாகவும் தெரியவந்தது. இதனை அடுத்து மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக அந்நபரை ஒருநாள் போலீஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் அவரின் கைத்துப்பாக்கிகளைப் போலீஸ் தரப்பின் வசம் உள்ளது. அந்த உரிமம் குறித்தும் மறு ஆய்வு செய்ய பெட்டாலிங் ஜெயா போலீஸ் தரப்பு அறிவுரை வழங்கியுள்ளது.
இதற்கிடையே வாக்குவாதத்தின்போது அவ்வாடவர் குண்டர் கும்பல்கள் குறித்து பேசியது தொடர்பிலும் விசாரணை மேற்கொள்கின்றது. இது குறித்த ஆதாரம் கிடைத்தால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நிக் ஏஸானி அறிக்கை வெளியிட்டுள்ளார்.













