அரியானா மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து

அரியானா மாநிலம் குருக்கிராமில் சோனா சாலையில் வழக்கமாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவே இருக்கும். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக தற்போதுள்ள சாலைக்கு மிக அருகில் 6 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அந்த மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கட்டுமான பணிகள் பாதி முடிக்கப்பட்ட நிலையில் இருந்த 6 கிலோ மீட்டர் நீளமுடைய மேம்பாலத்தின் ஒரு பகுதி நேற்று இரவு 11.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது.

பாலம் இடிந்த இடத்திற்கு மிக அருகில் உள்ள சாலையில் கார்கள், பைக்குகள் என ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

பாலம் இடிந்து விழுந்ததால் அருகில் உள்ள சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் பதறியடித்துக்கொண்டு தங்கள் வாகனங்களை சாலையில் அப்படியே நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்தனர்.

இந்த விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், அப்பகுதி முழுவதும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது

குருக்கிராமில் 6 கி.மீ. நீளமுடைய மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here