பிரதமரின் சுதந்திர தின செய்தி
புத்ராஜெயா –
நாட்டின் சுதந்திரத்தைத் தற்காத்துக் கொள்ளும் மன உறுதியை மலேசியர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் வலியுறுத்தினார்.
அதே சமயம் எந்த இடையூறுகளையும் மலேசியர்கள் துணிச்சலாக எதிர்கொள்ளும் மன உறுதியையும் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.
இன்று கொண்டாடப்படும் 63ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது முகநூலில் வெளியிட்ட பதிவில் அவர் இதனை தெரிவித்தார். புதிய வாழ்க்கைச் சூழலில் புதிய சவால்களை எதிர்கொண்டு நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றோம். எந்தத் தடைகள் வந்தாலும் நாம் அதனை மன உறுதியுடன் எதிர்கொண்டு முன்னேறுவோம் என்றார் அவர்.
நாடு சுதந்திரம் பெற்று 63ஆண்டுகளில் நாம் கடந்து வந்த பாதை நீண்ட தூரமாகும்.
நமது வாழ்க்கையின் இதுவும் ஒரு தொடக்கம்தான். நாம் வெவ்வேறாக இருப்பினும் ஒரே அணியாக இருந்து செயல்பட்டதால்தான் இந்த அமைதியைப் பெற முடிந்தது என்று அவர் சொன்னார்.
நாட்டின் இறையாண்மையை தற்காப்பதற்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்காகவும் பிரார்த்திப்பதாகவும் அவர் சொன்னார்.
வெற்றி பெற்ற ஒரு சமுதாயமாக நாம் தொடர்ந்து முன்னேறுவதற்கு இறைவன் நமக்கு வலிமையைத் தர வேண்டும் என்றார் அவர்.