கோலாலம்பூர், செப். 3-
கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கி 2019ஆம் ஆண்டு வரை பதிவான சட்டவிரோத சூதாட்ட குற்றங்கள் அனைத்தும் முழுமையாக விசாரிக்கப்பட்ட பின்னர் இன்று அதன் இயந்திரங்கள் அழிக்கப்பட்டன என்று கோலாலம்பூர் காவல் துறை தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி மஸ்லான் பின் லாசிம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
செராஸ் மாவட்டத்தில் 275 சட்டவிரோத சூதாட்ட குற்றங்கள் பதிவாகின. அதன் 2323 கணினிகள், 260 கைப்பேசிகள் ஆகியவை இன்று செராஸ் மாவட்ட காவல் நிலையத்தில் அழிக்கப்பட்டன.
நாட்டின் பசுமை திட்டத்தை பின்பற்றும் வண்ணம் இ-வெஸ்ட் எனப்படும் இந்த இயந்திரங்கள் முழுமையாக அழிக்கப்பட்டன. அதுமட்டுமின்றி அதிகமான பொருட்கள் அடங்கி இருக்கும் காவல் நிலையங்களின் ஸ்டோர்களை இதன் மூலம் காலிச் செய்யலாம்.
தலைநகரில் பல வட்டாரங்களில் சட்ட விரோதமாக நடத்தப்படும் சூதாட்டங்களுக்கு எதிராக போலீசார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குற்றங்களை முறையாக ஒழிக்க மக்கள் போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
சட்டவிரோதமாக சூதாட்டங்களை நடத்தப்பட்டால் கோலாலம்பூர் குற்றப்புலனாய்வு துறையினருக்கு 03-21460670 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
-எல்.கே.ராஜ்