இராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தின் தென் பகுதியில் நாவா மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் விமானப்படை வீரர்கள், நேற்று இரவின் போது ஹெலிகாப்டரில் பறந்து பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
இதன்போது எதிர்பாராத விதமாக இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. விமான இராணுவ கட்டுப்பாட்டு மையத்துடன் இருந்த அழைப்புகள் துண்டிக்கப்பட்டதை தொடர்ந்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
மீட்பு பணிகளில் ஈடுபட்டு, உயிரிழந்த 15 பேரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.