ஆஸ்திரேலியா நாட்டிற்கு, மசாலா பொருட்கள் என்ற பெயரில் கடத்த முயன்ற, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான, ‘சூடோபெட்ரின்’ போதைப் பொருளை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தின், தேனி நகரிலிருந்து, ஆஸ்திரேலியா நாட்டின், ஆபர்ன் நகருக்கு, மசாலா பொருட்கள் என்ற பெயரில், தனியார் கூரியரில், பதிவு செய்யப்பட்ட பார்சல் ஒன்று, சென்னை பன்னாட்டு விமான சரக்ககத்திற்கு வந்தது. அந்த பார்சலுக்குள் இருந்த, 37 சாம்பார் மற்றும், மிளகாய் பொடி பாக்கெட்டுகள், 100 மற்றும் 50 கிராம் எடையில் இருந்தன. அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பிரித்து ஆய்வு செய்ததில், அவற்றுக்குள், ‘சூடோபெட்ரின்’ போதைப் பொருள் இருப்பது தெரிந்தது.
இதன் மதிப்பு, 30 லட்சம் ரூபாய்.இது குறித்த விசாரணையில், சென்னையைச் சேர்ந்த சாதிக், 37, இந்தப் போதைப் பொருள் கடத்தலில் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. சாதிக்கிற்கு, கடத்தலில் உதவியாக இருந்த, சென்னையைச் சேர்ந்த கான், 30, புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆண்டனி, 41 மற்றும் தஞ்சையைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.கான், தேனியில் உள்ள தன் நண்பர் செல்வம் என்பவரது, ஆதார் அட்டையை தவறாக பயன்படுத்தி, இந்த பார்சலை பதிவு செய்தது, தெரியவந்தது. இது குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது.