தனது குடும்பத்தை நடத்த, இப்போது பெற்று வரும் ஊதியம் போதவில்லை என்று கூறி பிரதமர் பதவியை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்யப் போவதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
பிரிட்டன் பிரதமராக இருக்கும் போரிஸ் ஜான்சன் தற்போது 150,402 பவுண்டு ஊதியமாகப் பெற்று வருகிறார். இது அவரது முந்தைய வருவாயோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இருந்து வெளியாகும் தி டெய்லி மிரர் ஊடகத்தில் பெயர் குறிப்பிடாமல் எம்.பி. ஒருவர் வெளியிட்ட தகவலில், போரிஸ் ஜான்சன், பிரதமராவதற்கு முன்பு, நாளிதழ் ஒன்றில் தலையங்கம் எழுதி மாதம் 23,000 பவுண்டு ஊதியமாக பெற்று வந்ததாகவும், அடுத்த ஆண்டு அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிடடிருப்பதாகவும் கூறியுள்ளார்.
போரிஸ் ஜான்சனுக்கு ஆறு குழந்தைகள், அவர்களில் சிலர் இளைஞர்களாக உள்ளனர். அவர்களுக்குத் தேவையான செலவுகளை போரிஸ் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது, அவரது முன்னாள் மனைவி மரினா வீலருக்கு, விவாகரத்து நடைமுறைப்படி மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை அளிக்க வேண்டி உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.