பாகன் டத்தோ: துணை பிரதமர் பதவியை மீண்டும் நிலைநிறுத்தி அம்னோவிடம் கொடுக்குமாறு டான் ஸ்ரீ முஹைதீன் யாசினுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி (படம்) கட்சியின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
துணைப் பிரதமர், அமைச்சர் மற்றும் துணை அமைச்சர்கள் நியமனங்கள் பிரதமரின் முழுமையான உரிமையாகும் என்றார். எனவே, துணை பிரதமர் பதவியில் எந்தவிதமான ஊகங்களும், விளக்கங்களும், பகுப்பாய்வுகளும் இருக்கக்கூடாது. இருப்பினும் கட்சி கூட்டங்களின் போது இந்த விடயம் விவாதிக்கப்பட்டது என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும்.
எந்தவொரு கட்சியும் கோரிக்கையை முன்வைக்க முடியும், ஆனால் பிரதமருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை நாம் மதிக்க வேண்டும் என்று பாகன் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினரான அவர் நேற்று இங்குள்ள ஊத்தாங் மெலிந்தாவில் உள்ள ஜட்டியில் காலை உணவுக்காக உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்திருந்தபோது அவர் தெரிவித்தார்.
கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப், உள்ளூர் மலாய் நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், மக்களவையில் பட்ஜெட் 2021 தொடர்பான விவாதம் முடிந்ததும் துணை பிரதமர் பதவியைக் கேட்கும் பிரச்சினை எழுப்பப்படும் என்றார்.
பெரிகாத்தான் நேஷனல் அரசாங்கத்தில் மிகப் பெரிய நாடாளுமன்ற உறுப்பினர்களை அம்னோ கொண்டிருந்தாலும், அம்னோவுக்கு மற்ற மூத்த அமைச்சர்கள் பதவி வழங்கப்படவில்லை என்று இஸ்மாயில் சப்ரி கூறினார். – பெர்னாமா