துமகூரு மாவட்டத்தை சேர்ந்தவர் பலராம். இவரது மனைவி ரமாதேவி. இந்த தம்பதியின் மகன் நிரூப், தொழில்அதிபர். இவர், சொந்தமாக அரிசி ஆலை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நேற்று காலையில் துமகூருவில் இருந்து சிறப்பு ஹெலிகாப்டரில் மணமகன் நிரூப் தனது குடும்பத்தினருடன் தலகட்டபுராவில் உள்ள திருமண மண்டபத்திற்கு பறந்து வந்திருந்தார்.
இதுபற்றி மணமகன் நிரூப் கூறுகையில், ‘எனது திருமணம் புதுவிதமாக இருக்க வேண்டும் என்று குடும்பத்தினர் விரும்பினார்கள். மணமகள் வீட்டிலும் இதையே தெரிவித்தனர். அதன்படி, துமகூருவில் இருந்து தலகட்டபுராவுக்கு ஹெலிகாப்டரில் பறந்து வந்தேன். இது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. எங்கள் குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனை என் வாழ்நாளில் மறக்க முடியாது,’ என்றார்.
கொரோனா பரவல் காரணமாக ஆடம்பர திருமணத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மணமகன் ஹெலிகாப்டரில் பறந்து வந்ததுடன், அவரது குடும்பத்தினர் யாரும் முகக்கவசம் அணியவில்லை. மேலும் சமூக இடைவெளியையும் கடைபிடிக்காமல் இருந்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.