புதுடில்லி –
‘ராமர் கோயில் கட்டுமானத்துக்கான நிதி திரட்ட நாடு முழுவதும் மிகப் பெரிய பிரசார இயக்கம் நடத்தப்படும். மக்களிடம் இருந்து திரட்டப்படும் நன்கொடையைக் கொண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்” என அறக்கட்டளை பொது செயலர் சம்பத் ராய் தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளை கவனிப்பதற்காக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இதன் பொது செயலர் சம்பத் ராய் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக நாட்டு மக்களிடம் நிதி திரட்டும் மாபெரும் பிரசார இயக்க பணியினை தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நாடு முழுவதும் துவங்க உள்ளது.
இதற்காக 10, 100, 1000 ரூபாய் மதிப்பிலான ‘கூப்பன்’கள் அச்சிடப்பட்டுள்ளன. நன்கொடை வசூலில் வெளிப்படை தன்மை கடைபிடிக்கப்படும். நான்கு கோடி 10 ரூபாய் கூப்பன்களும், எட்டு கோடி 100 ரூபாய் , 12 லட்சம் 1000 ரூபாய் கூப்பன்களும் அச்சிடப்பட்டுள்ளன. முறையான அனுமதி இல்லாத காரணத்தினால் கோயில் கட்டுமான பணிகளுக்கு வெளிநாட்டு நன்கொடைகளை ஏற்றுக் கொள்ள இயலாது.
கோயிலின் அருகில் கட்டப்படும் கட்டடங்களின் கட்டுமான பணிகளுக்கு சி.எஸ்.ஆர். எனப்படும் பெரு நிறுவனங்களின் சமூகப்பணிகளுக்கான நிதி பெற்றுக் கொள்ளப்படும். கட்டுமான செலவுகளுக்காக மதிப்பீடு செய்யப்படவில்லை. நன்கொடை வசூலிலும் இலக்கு நிர்ணயிக்கவில்லை.