நாட்டில் உள்ள நகரங்களை பொலிவுறச்செய்யும் நோக்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கோவையை பொலிவுபடுத்தவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டும் ரூ.998 கோடி முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது தொகை ரூ.1500 கோடியாக உயர்த்தப்பட்டது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக நகரில் உள்ள சாலைகளை எவ்வாறு அழபடுத்துவது என்பது குறித்து சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில், கடந்தாண்டு கோவை மணிக்கூண்டு பகுதியில் சாலைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு, ஓவியங்கள் வரையப்பட்டதுடன், சாலை ஓரங்களில் பொதுமக்கள் அமரும் இடங்கள், நடைபாதையில் நிழல் தரும் அமைப்புகள் பல்வேறு மேம்பாட்டு பணிகள் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், அதே போன்ற சோதனை முயற்சி காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜெர்மென் நிறவனமான Giz மற்றும் மாநகராட்சி இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், “மணிக்கூண்டு பகுதியில் மேற்கொண்ட அதே பணிகள் தான் காந்திபுரம் கிராஸ்கட் சாலையிலும் மேற்கொள்ளப்பட உள்ளது. அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களில் பணிகள் முழுமையடையும் என்று எதிர்பார்க்கிறோம். ஒரு குறிப்பிட்ட பகுதியை பெரும் பொருட்செலவில் மேம்படுத்தி அதில் குறைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக இவ்வாறு சோதனை அடிப்படையில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக திட்டத்தின் மதிப்பில் இருந்து 5 முதல் 10 சதவீத பணம் மட்டும் செலவழிக்கப்படுகிறது. மாதிரி மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்த பின்னர், கிராஸ்கட் சாலை எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்படும்.