கோல்கட்டா :
ஜனாதிபதி மாளிகையில் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஓவியம் தொடர்பான சர்ச்சைக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அன்றையதினம் சுபாஷ் சந்திரபோஸின் உருவப்பட ஓவியத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் திறந்து வைத்தார். அந்த புகைப்படத்தில் உள்ளது சுபாஷ் சந்திரபோஸ் இல்லை என்றும் கடந்த 2019 இல் வெளியான நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான கும்னாமி படத்தில் சுபாஷாக நடித்த வங்க மொழி நடிகர் புரோசென்ஜித் சாட்டர்ஜி என்றும் திரிணமுல் காங். உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.
இதற்கு மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம்: சுபாஷ் சந்திரபோஸ் குடும்பத்தினரிடம் இருந்து அவரது புகைப்படத்தை பெற்று பத்மஸ்ரீ விருது வென்ற ஓவியர் பரேஷ் மைதி வரைந்த ஓவியத்தை தான் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
அந்த ஓவியம் குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் குறிப்பிடும் கருத்து தவறானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.