சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகால சிறை தண்டனை முடிந்து கடந்த 27-ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்பட்டார். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றார். தற்போது அவர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்.
சசிகலா
சசிகலா கொரோனா பாதிப்பு, மற்ற உடல் நல பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வந்திருப்பதுடன், அவரது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பி இருப்பதாகவும் நேற்று முன்தினம் விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் கூறி இருந்தது.
இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து சசிகலாவை இன்று டிஸ்சார்ஜ் செய்வதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சசிகலாவின் 10 நாட்கள் சிகிச்சை நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. அவருக்கு எந்த அறிகுறியும் இல்லை. 3 நாட்களாக அவர், செயற்கை சுவாசகருவி இல்லாமல் தாமாகவே சுவாசிக்கிறார். கொரோனா விதிமுறைகளின்படி 31- ஆம்தேதி (இன்று) மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். அவர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளதால், வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா மருத்துவமனையில் இருந்து இன்று காலை 10.30 மணியளவில் சசிகலா டிஸ்சார்ஜ் ஆக இருக்கிறார். கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள சசிகலா வீட்டு தனிமையில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதால், அவர் உடனடியாக பெங்களூருவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்ல மாட்டார் என்று தெரிகிறது. பெங்களூருவில் சில நாட்கள் ஓய்வெடுத்து விட்டு, அதன்பிறகே சசிகலா சென்னைக்கு புறப்பட்டு செல்ல இருக்கிறார்.
அதாவது வருகிற 5-ஆம் தேதி பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு சென்று விட்டு, அங்கிருந்து சசிகலா சென்னைக்கு செல்ல இருப்பதாக சொல்லப்படுகிறது. பெங்களூருவில் உள்ள ஓட்டல் அல்லது உறவினர் வீட்டில் சசிகலா சில நாட்கள் ஓய்வெடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.