-உலக தண்ணீர் தின கருத்தரங்கில் தகவல்
‘இந்தியாவில் சுமார் 60 கோடி மக்கள் தீவிர தண்ணீர் பிரச்சினையை சந்தித்து வருகின் றனர்’ என, திருநெல்வேலியில் நடைபெற்ற உலக தண்ணீர் தின கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
உலக தண்ணீர் தினத்தை யொட்டி மணிமுத்தாறில் உள்ள அகத்தியமலை மக்கள் சார் இயற்கைவள காப்பு மையம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்டம், மாவட்ட அறிவியல் மையம், நெல்லை இயற்கை சங்கம் சார்பில் ‘நீரினை மதிப்பிடுவோம்’ என்ற கருப்பொருளை மையப்படுத்தி, பள்ளி மாணவர்களுக்கு ‘என் கதை மற்றும் என் குறும்படம்’ என்ற போட்டிகள் நடத்தப்பட்டது.
8 முதல் 10 வயதுடைய மாணவர்கள் தண்ணீர் குறித்த கதைகளை சொல்லியும், 11 முதல் 14 வயதுடைய மாணவர்கள் தண்ணீர் குறித்த மூன்று நிமிட குறும்படங்களை உருவாக்கியும் சமர்ப்பித்திருந்தனர். 60 கதை களும், 32 குறும்படங்களும் மாணவர் களால் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றை தேர்வுக் குழுவினர் பரிசீலித்து முதல் மூன்று இடங்கள் மற்றும் ஓர் ஆறுதல் பரிசுக்குரியவற்றை தேர்வு செய்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா மற்றும் கதைகள், குறும்படங்கள் திரையிடல் விழா திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற்றது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு அலுவலர் எம்.ஜி.கணேசன் விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மாவட்ட அறிவியல் அலுவலர் முத்துகுமார் தலைமை வகித்தார். நெல்லை இயற்கை சங்க தலைவர் அமரவேல் பாபு வாழ்த்துரை வழங்கினார். கூந்தன்குளம் பறவைகள் பாதுகாவலர் பால்பாண்டிக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விவசாயம் பாதிப்பு
அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வள காப்பு மைய ஒருங் கிணைப்பாளர் மு.மதிவாணன் கூறும்போது, ‘ஐக்கிய நாடுகள் சபை மார்ச் 22-ம் தேதியை சர்வதேச தண்ணீர் தினமாக அறிவித்துள்ளது. மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களுக்கு நன்னீர் ஆதாரம் அதிமுக்கியமான ஒன்று. மாசுபாடு, அதீத பயன்பாடு, காலநிலை மாற்றம் போன்ற பெரும் ஆபத்துகளை நன்னீர் ஆதாரங்கள் சந்தித்து வருகின்றன. இந்தியாவில் சுமார் 60 கோடி மக்கள் தீவிர தண்ணீர் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.
நீருக் கான தேவை நாடெங்கிலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் பெருகி வரும் மக்கள்தொகை, தீவிர விவசாயம், தொழிற் வளர்ச்சி போன்ற காரணங்களினால் நீருக்கான தேவை அதிகரித்து வருகிறது. வற்றாத தாமிரபரணி ஆறு பாய்ந்தோடும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 2- ஆம்போக சாகுபடிக்கு நீர் இல்லாமல் அடிக்கடி விவசாயம் பொய்த்து போகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’ என்றார் அவர்.