புத்ராஜெயா:
மைக்கார்ட்டில் (MyKad) முகவரியைப் புதுப்பிக்கக் கோரி எவ்விதச் சிறப்புப் பிரச்சாரத்தையோ அல்லது அமலாக்க நடவடிக்கைகளையோ தாங்கள் மேற்கொள்ளவில்லை என தேசியப் பதிவு இலாகா (JPN) தெளிவுபடுத்தியுள்ளது.
முகவரியை மாற்றத் தவறினால் 20,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனச் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது என்றும், அது பொதுமக்களிடையே தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்கார்ட்டில் உள்ள தகவல்களைத் துல்லியமாகப் பராமரிப்பது ஒவ்வொரு மலேசியர்களின் கடமையாகும் என்றும், நிரந்தரமாக வேறு முகவரிக்கு மாறுபவர்கள் 10 ரிங்கிட் கட்டணம் செலுத்தி தங்களின் மைக்கார்ட் முகவரியைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் இலாகா சுட்டிக்காட்டியுள்ளது.
1990-ஆம் ஆண்டின் தேசியப் பதிவு விதிகளின் கீழ் 90 நாட்களுக்கும் மேலாகப் புதிய முகவரியில் வசிப்பவர்கள் முகவரியை மாற்ற வேண்டும் என்ற விதிமுறை பல காலமாக அமலில் இருந்தாலும், அரசாங்கம் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்பதால் பொதுமக்கள் அதிகாரப்பூர்வமற்ற போலிச் செய்திகளைப் பகிர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.





















