–சமூக மதிப்பு, சுற்றுச்சூழல், சமூக அக்கறையில் சிங்கையின் நகர்வு
சிங்கப்பூரின் எதிர்காலத்தை உருவாக்குவதற்குரிய புதிய மூன்று அம்சங்கள் முக்கியம் என துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியாட் யோசனை தெரிவித்து இருக்கிறார்.
சமூகத்திற்கு மேலும் மதிப்பை உருவாக்குவது; சுற்றுச்சூழல், பரந்த அளவிலான சமூகத்தில் அக்கறை காட்டுவது, முன்னேற்றத்துக்கான பாதையை வகுப்பது ஆகியவை அந்த மூன்று அம்சங்கள் என்று ஹெங் குறிப்பிட்டார்.
பணம், கார், கடன் அட்டை, கூட்டுரிமை வீடு, மனமகிழ் மன்ற உறுப்பியம் ஆகிய ஐந்தும் முன்பு சிங்கப்பூரர்களின் கனவாக இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
இருந்தாலும் அந்த விருப்பங்கள் இன்றைய இளம் சிங்கப்பூரர்களைப் பொறுத்த வரையில் இனிமேல் அந்த அளவுக்கு ஒத்து இருக்காது. எப்போதுமே விருப்பங்கள் பரிணமித்து வருபவை. இளம் தலைமுறையினரிடையே அவர்களுக்குச் சொந்தமான விருப்பங்கள் இருக்கின்றன, என்று ஹெங் தெரிவித்தார்.
சிங்கப்பூர் தொழில்நுட்ப வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தின் அமைச்சர் நிலைக் கருத்தரங்கு நேற்று நடந்தது.
சிங்கப்பூரின் வளர்ச்சியும் மேம்பாடும் வேறுபட்டு இருந்த ஒரு காலகட்டத்தில் நீங்கள் பிறந்து வளர்ந்து இருக்கிறீர்கள். உலக கலாச்சாரத்திற்கும் செல்வாக்கிற்கும் சமூக ஊடகங்களுக்கும் நீங்கள் ஆளாகி இருப்பது அதிகம் என்று ஹெங் குறிப்பிட்டார்.









