விசாரணை நடத்துக-
கோரிக்கை வலுக்கிறது!
கோலாலம்பூர்-
போலீஸ் தடுப்புக் காவலில் இருந்தபோது அடிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஏ. கணபதியின் மரண விவகாரத்தில் நீதி வேண்டும் எனும் கோரிக்கை வலுத்து வருகிறது.
அரசாங்கம் இந்த விவகாரத்தைக் கடுமையாகக் கருத வேண்டும் என்று இளைஞர் விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் சைடை் சாடிக் சடை் அப்துல் ரஹ்மான் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.
இது தொடர்பான அவருடைய வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலானது.
போலீஸ் தடுப்புக் காவலில் கணபதி மரணமுற்ற சம்பவத்தைக் கடுமையாகக் கருத வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
குற்றவாளிகளானாலும் தடுப்புக் காவல் கைதிகளை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
ஏற்கெனவே போலீஸ் தடுப்புக் காவலில் குகன் ஆனந்தன் (2009), சுகுமார் செல்லதுரை (2013), கருணாநிதி (2013), தர்மேந்திரன் (2013), பாலமுருகன் (2017) ஆகியோரின் மரணச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டிப் பேசிய சைட் சாடிக், இந்த ஆண்டு கணபதி மரணமுற்றச் சம்பவத்தை வேதனையுடன் குறிப்பிட்டார்.
கணபதி மரண விவகாரத்தில் நீதி வேண்டும் என்றும் அவர் அந்த வீடியோ பதிவில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
கணபதி மரணம் தொடர்பில் மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மஇகா உதவித் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் நேற்று முன்தினம் உள்துறை அமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே, கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை 12 நாட்கள் போலீஸ் காவலில் இருந்த 40 வயது கணபதி மரணமுற்ற விவகாரத்தில் போலீஸ் இன்னும் மௌனம் சாதிப்பது ஏன் என்று இளைஞர் குழுவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
போலீஸ் காவலில் தன் மகன் தாக்கப்பட்டிருக்கிறார் என அவருடைய தாயார் எஸ். தனலெட்சீமி போலீசில் புகார் செய்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஏ. கணபதி மரணம் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக பொது விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த இளைஞர் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பு சவப் பரிசோதனை அறிக்கைக்காக போலீஸ் காத்திருக்கிறது என்றும் ஏற்கெனவே கோம்பாக் போலீஸ் தலைவர் ஏசிபி அரிஃபாய் தராவி கூறியிருந்தார்.