-நாளை மறுநாள் பதிவியேற்பு!!
திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடைபெறும் என்றும், அதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கு பல்வேறு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.
ஆரம்பம் முதலே திமுக கூட்டணி முன்னிலையில் இருந்து வந்தது. இந்நிலையில் திமுக கூட்டணி 158 இடங்களிலும், அதிமுக கூட்டணி 76 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. எனவே 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் தி . மு . க . ஆட்சி மலர்கிறது .
53 வருட அரசியல் பயணத்தை கடந்துள்ள ஸ்டாலின் முதல் முறையாக முதல்வர் நாற்காலியை அலங்கரிக்க உள்ளார் . அவருக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர் .
இந்த நிலையில் நாளை திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திபிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், விரைவில் கவர்னர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிவித்துள்ளார்.





















