சிரம்பான் : மலேசியாவில் முதல்முதலாக நெகிரி செம்பிலான் மாநிலத்தில், தனியார் நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ள கோவிட் 19 சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.
சிரம்பான் நீலாயில் திறந்து வைக்கப்பட்ட இத்தனியார் தனிமைப்படுத்தல் மையம் 200 படுக்கைகள் கொண்டுள்ளது. இது கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 8) முதல் செயல்படத் தொடங்கியதாக சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் அறிவித்த்தாக மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமினுதீன் ஹருன் தெரிவித்தார்.
இந்த மையத்தில் படுக்கைகளின் எண்ணிக்கை விரைவில் 600 ஆக உயர்த்தப்படும் என்றும் தற்போதைய (அரசாங்கத்தால் நடத்தப்படும்) மையங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதால் மக்கள் வசதியை கருத்தில் கொண்டு இத் தனியார் மையத்திற்கு அனுமதி வழங்கியதாகக் அவர் கூறினார்.
மேலும் ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு நாளைக்கு RM150 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அவர் விஸ்மா நெகிரியில் நடந்த மாநில எக்ஸோ கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
போர்ட்டிக்சன் பாலிடெக்னிக், கோலா பிலா நர்சிங் நிறுவனம் மற்றும் மான்டின் பல்நோக்கு மண்டபம் என மாநிலத்தில் மூன்று சுகாதார அமைச்சின் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் உள்ளன. மேலும் துவாங்கு ஜாஃபர் மருத்துவமனை மற்றும் ஜெலெபு, ஜெம்போல் மற்றும் தம்பின் ஆகிய மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் இடப்பற்றாக்குறை இன்றி மேலும் அதிகபடியான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சில மருத்துவமனைகளில் இயல்பான வார்டுகள் கோவிட் -19 சிகிச்சை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. நெகிரியில் அதிகமான தனியார் மையங்களைத் திறக்க அரசாங்கத்திற்கு பலரிடமிருந்து விண்ணப்பங்கள் வந்ததாகவும் கூறினார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் கோவிட் -19 தொற்றுக்களின் எண்ணிக்கை குறிப்பாக தொழில்துறை துறையில் அதிகரித்து வருகின்றது. “ஒரு குறிப்பிட்ட உற்பத்தி நிலையத்தில் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட தொற்றுக்கள் பரவியதனையிட்டு மிகுந்த கவலையடைகின்றேன்” என்றும் அவர் தெரிவித்தார்.
இப்பொழுது நாட்டில் நடமாட்டக்கட்டுப்பாடு அமலிலுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மாநில அரசு ஒதுக்கியுள்ள 10 மில்லியன் ரிங்கிட் பற்றி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், அரசு ஒதுக்கியுள்ள நிதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 50, 000 குடும்பங்களுக்கு உணவு கூடைகள் வழங்க 5 மில்லியனை பயன்படுத்த மாநில எக்ஸோ ஒப்புக் கொண்டுள்ளது என்று கூறினார்.
மேலும் “ஒவ்வொரு குடும்பத்திற்கும் RM100 மதிப்புள்ள உணவு கூடைகள் அல்லது கூப்பன்கள் கிடைக்கும்” என்றும் அவர் கூறினார், இந்த உதவி மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகங்கள் மூலம் விநியோகிக்கப்படும். மேலும் மாநிலத்தில் கோவிட் -19 சிகிச்சை வசதிகளுக்காக ஆக்ஸிஜன் வாங்க RM500, 000 ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.