கலங்கிப்போன அதிகாரிகள்.!
மெக்சிகோவில் இருந்து மெக்சிகோ – அமெரிக்கா எல்லை வழியாக பலரும் அகதிகளாக அமெரிக்காவில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இவர்கள் பல நேரங்களில் சட்டவிரோதமாக லாரிகளிலும், ஆபத்தான பயண வழிகளிலும் அமெரிக்காவிற்கு பயணம் செய்து அங்கு குடியேறி வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது காவல்துறை அதிகாரிகளால் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டு அது பெரும் வைரலாகி வருகிறது. மேலும், பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான தகவலில் அதிகாரிகள் தெரிவிக்கையில், ” சுமார் 100 பேர்களை ஏற்றுக்கொண்ட ஒரு கனரக வாகனம் இரண்டு வயது சிறுவனை தனியாக சாலையோரம் தவிக்க விட்டுச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
சிறுவன் சாலையோரம் நிற்பதாக தகவல் அறிந்து நாங்கள் நேரில் சென்று காணும்போது, கையில் பாதி அளவு நீருள்ள ஒரு பாட்டில் , சிப்ஸ் உடன் நின்றுகொண்டிருந்தான். அவனுக்கு மேலாடை சட்டை கூட இல்லாமல் கைகளை கட்டிக்கொண்டு, அழுது கொண்டே இருந்தான்.
சிறுவனிடம் நாங்கள் விசாரிக்கையில், சுமார் 100 பேர் அகதிகளாக லாரிகளில் செல்கிறார்கள் என்பது ஒரு விஷயம் உறுதியானது. சிறுவன் பார்க்க பாவமான நிலையில் தாய் தந்தையை தேடி அழுது கொண்டிருந்த சமயத்தில், நாங்கள் அங்கு சென்று அவனை காப்பாற்றினோம்.
பின்னர் குழந்தைகள் நல அதிகாரியிடம் சிறுவனை ஒப்படைத்து இருக்கிறோம். அவர்கள் சிறுவனை கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். சிறுவன் யார்? எங்கிருந்து வந்தான்? என்பது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. சிறுவன் தற்போது கொஞ்சம் பயத்தில் இருப்பதால், அவன் சூழ்நிலையை உணர்ந்த பின்னர் விசாரணை செய்யலாம் என்று காத்திருக்கிறோம்.
மத்திய அமெரிக்கப் பகுதிகளில் இருந்து மெக்சிகோவிற்கு பெற்றோர்கள் இல்லாமல் பல குழந்தைகள் புலம்பெயர்ந்து வருவதாகவும் அல்லது கடத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுவன் அவர்களிடம் இருந்து தப்பி இருக்கலாம் அல்லது சிறுவனைக் கொண்டு வந்தவர்கள் விட்டுவிட்டு சென்று இருக்கலாம் ” என்று தெரிவிக்கின்றனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக அகதிகள் படகு கடலில் விபத்திற்குள்ளாகி சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதே சோகத்தினை பலருக்கு மீண்டும் இந்த சோகம் ஏற்படுத்தியுள்ளது.