பெண்கள் பல ஆண்களை மணக்கலாமா?
தென்னாப்பிரிக்காவில் பெண்கள் பல மணம் செய்வதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கும் மசோதாவை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மசோதா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
தென்னாப்பிரிக்காவில் ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வமாக அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நாட்டில் 2- ஆவது திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆண்கள் நீதிமன்றத்தை அணுகி முறைப்படி அனுமதி பெறலாம்.
அடுத்தடுத்த திருமணங்களுக்கும் இதேபோல அனுமதி பெற முடியும். தன்பாலின திருமணத்துக்கும் தென்னாப்பிரிக்காவில் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
ஆண்களை போன்று பெண்களும் பல மணம் செய்வதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கும் மசோதாவை அறிமுகம் செய்ய அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அரசின் கொள்கை முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் ஆரோன் கூறும்போது, ”தென்னாப்பிரிக்க திருமண சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. இந்து, யூத, முஸ்லிம் மத திருமணங்கள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. பாலின சமத்துவமும் இல்லை என்று சிலர் விமர்சித்து வருகின்றனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில்கடந்த 2019- ஆம் ஆண்டு முதல் ஆலோசனைகளை நடத்தி வருகிறோம். திருமண சட்ட சீர்திருத்தம் தொடர்பாக அமைச்சரவை விரிவாக விவாதிக்கும். தேசிய அளவிலும் விவாதம் நடத்தப்பட்டு மக்களின் கருத்துகள் கேட்கப்படும். அனைத்து தரப்பினரின் கருத்துகளை ஆராய்ந்தபிறகு இந்த விவகாரத்தில் நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும்’ என்று தெரிவித்தார்.
பெண்கள் பல ஆண்களை திருமணம் செய்ய வகை செய்யும் புதிய மசோதாவை கொண்டுவர பழமைவாத குழுக்கள், பல்வேறு மதத் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.