கோலாலம்பூர், (ஜூன் 30) :
இன்று (ஜூன் 30) நகரின் ஒரு சில இடங்களில் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மக்களை ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுத்துள்ள கறுப்புச் சட்டை எதிர்ப்புக் குழுவால் ஒன்றுகூடுவதற்காக குறிவைக்கப்பட்ட இடங்களை போலீசார் கண்காணித்து வருகின்றார்கள்.
புதன்கிழமை நண்பகல் நிலவரப்படி, டாங் வாங்கி காவல்துறையினர் டத்தாரான் மெர்டேக்காவிற்கு செல்லும் அனைத்து சாலைகளையும் மூடியுள்ளனர். மேலும் ஜாலான் ராஜா லாவூட் மற்றும் ஜாலான் ராஜா சுல்லான் ஆகிய இடங்களில் உள்ள இ.பி.எஃப் (EPF ) கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதிகளை கண்காணித்து வருகின்றனர் என்று அறியப்படுகின்றது.
டாங் வாங்கி ஒ.சி.பி.டி உதவி கமிஷனர் முகமட் ஜைனல் அப்துல்லா இது தொடர்பாக கூறியதாவது, நண்பகல் நிலவரப்படி கூட்டம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான எந்த இயக்கமும் கண்டறியப்படவில்லை என்றும் இந்த பொறுப்பற்ற குழுவின் அறிவுறுத்தலின் படி நகரத்தில் உள்ளவர்களும் மற்றவர்களும் ஒன்றுகூட வேண்டாம் என்று தான் மக்களை அறிவுறுத்துவதாகவும் கூறினார்.
“தேசிய மீட்பு திட்டத்தின் முதல் கட்டத்தின் போது விதிமுறைகளை மீறும் மற்றும் கோவிட் -19 நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) பின்பற்றத் தவறும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம்” என்று அவர் கூறினார்.
கருப்பு சட்டை குழு இஸ்தானா நெகாரா மற்றும் நாடு முழுவதும் உள்ள மாநில அரண்மனைகள் மற்றும் EPF தலைமையகம் மற்றும் மாநில கிளைகள், டத்தாரான் மெர்டேக்கா, டத்தாரான் புத்ரா போன்ற பல இடங்களில் மக்களை ஒன்றுகூடி ,கோவிட் -19 தொற்றுநோயை அரசாங்கம் கையாளுவதை எதிர்ப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.