தீவிபத்தில் கருகி பலி
திருச்சியில் சானிடைசர் மூலம் நெருப்பு பற்ற வைத்து கூட்டாஞ்சோறு சமைத்து விளையாடிய சிறுவன் தீவிபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருவாடுப்பேட்டையைச் சேர்ந்த கூலி தொழிலாளியான பாலமுருகனின் மகன் ஸ்ரீராம், வீட்டிற்கு அருகே நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாஞ்சோறு சமைத்து விளையாடி உள்ளான். அப்போது நெருப்பை பற்ற வைப்பதற்கு விறகில் சானிடைசரை ஊற்றி தீ மூட்ட முயற்சித்துள்ளான்.
எதிர்பாராத விதமாக சானிடைசர் பாட்டில் வெடித்து சிறுவனின் சட்டையில் பற்றிய தீ, உடல் முழுவதும் பரவியது. உடனடியாக சிறுவனை மீட்ட அக்கம் பக்கத்தினர், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் தீ விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இது தொடர்பாக கோட்டை நிலைய காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சானிடைசரால் சிறுவனின் உயிர் பறிபோனது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.