கோலாலம்பூர், ஜூலை 20:
இன்று நாட்டிலுள்ள முஸ்லீம் பெருமக்கள் ஹஜ்ஜுப்பெருநாளை கொண்டாடுகின்றனர். இன்று தேசிய பள்ளிவாசலில் 300 பேருடன் நடந்த சிறப்பு தொழுகையில் நாட்டின் பிரதமர் முஹிடின் யாசின் பங்குகொண்டார்.
பிரதமர் முஹிடின் மற்றும் அவரது மனைவி நூரெய்னி அப்துல் ரஹ்மான் ஆகியோரை பிரதமரின் மத விவகாரத்துறையில் அமைச்சர் ஸூல் கிஃப்லி முகமட் அல் பக்ரி மற்றும் தேசிய மசூதி தலைமை இமாம் எஹ்சன் முகமட் ஹோஸ்னி ஆகியோர் வரவேற்றனர்.
SOP களுக்கு இணங்க, இமாம் எஹ்சன் தலைமையிலான தொழுகையை செய்வதற்கு முன்பு அனைவரும் தக்பீர் என்று அழைக்கப்படும் இறைவனது புகழை பாடினர்.
“சவால்கள் மற்றும் தியாகங்கள்” என்ற தலைப்பில் இக்ஹஜ்ஜுப்பெருநாள் பிரசங்கத்தை நிகழ்த்திய இமாம் , இன்று இத் தியாகத்திருநாளை கொண்டாடும் வாய்ப்பு உட்பட எண்ணற்ற ஆசீர்வாதங்களை நாட்டிற்கு அல்லாஹ் வழங்கியுள்ளான் என்றார்.
கோவிட் -19 தொற்றுநோயால் முன்வைக்கப்பட்ட சவால்கள் இருந்தபோதிலும், அனைத்து முஸ்லீம்களும் நன்றியுடன் இருக்க வேண்டும் என்றும் மேலும் இறைவனை மகிமைப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
நாட்டின் கோவிட் -19 தொற்றுக்களது எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருப்பதால், இந்த ஆண்டு நாங்கள் பெரும் சவால்களுக்கிடையில் மற்றும் நடமாட்டக் கட்டுப்பாடுகளின் கீழ் நாம் இந்த ஹஜ்ஜுப்பெருநாளைக் கொண்டாடுகிறோம் என்றும் உங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள், ”என்றும் கூறினார்.
நாட்டின் தலைவர்கள் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தொற்றுநோய்களின் போது மக்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.










