ஜெர்மன்: கோவிட்-19 வைரஸ்க்கு எதிராக பல்வேறு தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை மிக வேகமாக உலக நாடுகள் செலுத்தி வருகின்றது.
இந்த நிலையில் வடக்கு ஜெர்மனியில் உள்ள தாதி ஒருவர் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு பதிலாக உப்புக் கரைசலை செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதனால் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளானார்கள். மேலும் இந்த தாதி எதற்காக இவ்வாறு செய்தார் என்பது குறித்த தகவல்கள் இன்னும் தெரியவில்லை.
ஆனால் அவர் சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் தடுப்பு மருந்துகளுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் உப்புக் கரைசலானது மக்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இருப்பினும் தடுப்பூசி செலுத்திக் கொண்டோம் என்று நம்பிக்கை உடையவர்களுக்கு குறிப்பாக முதியவர்களுக்கு கொரோனா தொற்றும் பரவும் என அச்சம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் காரணமாக, வடக்கு ஜெர்மனி அதிகாரிகள் மக்களிடம் மீண்டும் ஒருமுறை அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் அந்த தாதி கைது செய்யப்பட்டாரா மற்றும் அவரைக் குறித்த முழு விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..