காபூல் விமானநிலையத்திற்கு அருகில் வெடிமருந்து நிரம்பிய காரின் மீது அமெரிக்கா மேற்கொண்ட ஆளில்லா விமானதாக்குதலில் சிக்கி பல சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்டு 29) இடம்பெற்ற இந்த தாக்குதலில் மூன்று சிறுவர்கள் உட்பட ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
குடியிருப்பு பகுதியொன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றே இவ்வாறு இலக்குவைக்கப்பட்டு தாக்கப்பட்ட நிலையில், வீடுகள் அதிர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என பல ஊடங்கள் தெரிவித்துள்ளன. தனது குடும்பத்தவர்கள் அந்த கட்டிடத்தில் வசித்ததாக தெரிவித்துள்ள டினா முகமட் என்பவர் , பலர் கொல்லப்பட்டதாக கூறிய அதேவேளை, வீட்டிற்கு அருகில் வசிக்கும் அஹ்மடின் என்பவர் தாக்குதலின் பின்னர் உயிரிழந்த குழந்தைகளின் உடல்களை தான் சேகரித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் ஆறு சிறுவர்கள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என சிஎன்என் (CNN) தெரிவித்துள்ளது. அத்துடன் நாங்கள் அனைவரு+ம் அவர்களை காப்பாற்ற முயன்றோம் தீயை அணைப்பதற்காக தண்ணீரை ஊற்றினோம் என ஆளில்லா விமானதாக்குதலில் சிக்கிய வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளனர்.
ரொக்கட் தாக்கியவேளை அங்கிருந்த 9 பேர் கொல்லப்பட்டதுடன் இலக்குவைக்கப்பட்ட கார் உள்ளே காணப்பட்டதாகவும் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரொக்கட் சத்தம் கேட்டதும் அருகில் உள்ள வீட்டிலிருந்து சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்றேன் முதலில் நாங்கள் மூன்று அல்லது நான்கு வயது குழந்தையை அங்கிருந்துஅகற்றினோம், அந்த இடம் முழுவதும் தீயும் புகையுமாக காணப்பட்டதாகவும், மூவர் காருக்குள் இருந்த நிலையில் மூவர் காருக்கு வெளியே காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.