ஊசி மூலம் குழந்தைகளுக்கு கோழி ரத்தம்.. சீனாவில் பிரபலமாகி வரும் ‘சிக்கன் பேரண்டிங்’

பீஜிங்: தங்கள் குழந்தைகளை எதிர்காலத்தில் அதிக திறன்படைத்தவர்களாக மாற்றுவதற்காக, கோழியின் ரத்தத்தை ஊசி மூலம் உடலில் செலுத்தும் ‘சிக்கன் பேரண்டிங்’ எனப்படும் வினோத வளர்ப்பு முறை சீன பெற்றோர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு பெற்றோருக்குமே தங்களது பிள்ளைகள் புத்திசாலிகளாக, வாழ்க்கையில் வெற்றியாளர்களாக வலம் வர வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். அவர்களின் எதிர்காலத்திற்காக தங்களது நிகழ்காலத்தை அடகு வைக்க தயங்கவே மாட்டார்கள்.

சிலர் தங்களது குழந்தைகளுக்கு அறிவுச் செல்வத்தை சேமித்து தரும் செயல்களை மேற்கொள்வார்கள். ஆனால், வேறு சிலரோ குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வினோதமான செயல்களைச் செய்வார்கள். தற்போது சீனாவிலும் அது போல் தான், சிக்கன் பேரண்டிங் (chicken parenting) எனப்படும் வினோதப் பழக்கம் ஒன்று பிரபலமாகி வருகிறது.

கேட்பதற்கே வித்தியாசமாக இருக்கும் இந்த சிக்கன் பேரண்டிங் முறையில், பெற்றோர் / பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கோழியின் இரத்தத்தை ஊசி மூலம் செலுத்துகிறார்கள். இது எதிர்காலத்தில் அக்குழந்தைகள் அதிக புத்திசாலிகளாக இருப்பதற்கும், கருவுறாமை, புற்றுநோய் மற்றும் வழுக்கை உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளுக்கும் மருந்தாக இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

இந்தக் கோழி இரத்த ஸ்டீராய்டுகள் குழந்தைகளிடம் (Children) உயர் செயல்திறனை அதிகரிக்கச் செய்கிறதாம். இதனால் குழந்தைகள், கல்வி விளையாட்டு என அனைத்திலும் மிக அதிக சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள் என்றும் அவர்களது செயல்திறனை பன்மடங்கு அதிகரிப்பதாகவும் சீனப் பெற்றோர்கள் கூறுவதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

அதோடு சீன இளைஞர்கள் இடையே மன அழுத்தம் அதிகரித்திருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. எனவே குழந்தையிலேயே கோழி இரத்தம் செலுத்தினால் பின்னாளில் இந்த மாதிரியான பிரச்சனைகள் வராமல் இருக்கும் என்றும் சீனப் பெற்றோர்கள் நினைப்பதாகக் கூறப்படுகிறது. இதுவும் சிக்கன் பேரன்டிங் வளர்ப்பு முறை அதிகரித்து வர ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.

சப்சீனா என்ற இணையத்தில் வெளியாகியுள்ள அறிக்கையின்படி, இந்த ‘சிக்கன் பேரண்டிங்’ வளார்ப்பு முறை சமீபகாலமாக அங்கு பிரபலமாகி இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் குவாங்சோ போன்ற நகரங்களில் வாழும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் மத்தியில் இந்த பழக்கம் அதிகமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here