கோலாலம்பூர்: கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் நாடு தழுவிய முடக்கநிலை (3.0) அறிவிக்கப்பட்டதன் பின்னர் 37,000 க்கும் மேற்பட்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SME) மற்றும் சுமார் 200 விளையாட்டு தொடர்பான நிறுவனங்கள் தங்கள் வணிகங்களை மூடிவிட்டதாக நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது .
இந்த ஆண்டு மே மாதம் மூன்றாம் சுற்று நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (MCO3.0) அமல்படுத்தப்பட்ட பிறகு மொத்தம் 37,415 வணிகங்கள் தங்கள் செயல்பாடுகளை நிறுத்த வேண்டியிருந்தது என்று தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் நோ ஒமார் கூறினார்.
“அவைகளில் பெரும்பாலானவை சிறு வணிகங்கள் ஆகும். இவற்றுள் மொத்தம் 26,007 சிறு வணிகங்கள் மற்றும் சுமார் 2,738 நடுத்தர நிறுவனங்கள் அடங்கும்” என்றும் அவர் தெரிவித்தார்
பங் மொக்தார் ராடின் (BN-Kinabatangan), நாட்டில் ஏற்பட்ட சுகாதார நெருக்கடியைத் தொடர்ந்து எத்தனை தொழிலதிபர்கள் வணிகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்? என்ற அவரது கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக நோ இதனை தெரிவித்தார்.
இதற்கிடையில், கடந்த ஆண்டு விளையாட்டு தொடர்பான 200 நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை நடத்தும் செலவை ஈடுகட்ட முடியாததால், மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று துணை இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் டி லியான் கெர் தெரிவித்தார்.
“அவர்களில் பெரும்பாலோர் உடற்பயிற்சி மையங்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 93.2 விழுக்காடு விளையாட்டுத் துறை வீரர்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 58.8 விழுக்காட்டினர் தங்கள் வணிகம் மற்றும் தினசரி நடவடிக்கைகளை நடத்துவதற்கு நிதி உதவி தேவை என்று கூறியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.