பி.ஆர்.ராஜன்
மலேசியாவில் தற்போது மதம்– சமயம் பற்றிய விவாதங்களும் வாக்குவாதங்களும் தான் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. நாட்டில் இப்போது திடீர் என ஏன் இந்த மாற்றம்? என்னதான் நடந்துகொண்டிருக்கிறது என்பது புரியாமல் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர்.
அண்மைக்காலமாக விவாதமும் வாக்குவாதமும் சமயத்தையும் மதத்தையும்தான் முழுமையாக சார்ந்திருக்கிறது. பல இனங்கள் வாழும் மலேசியாவில் பன்முக கலை, கலாச்சாரங்களும் சமயங்களும் பின்பற்றப்படுகின்றன. இவற்றை கேள்விக்குறியாக் கும் வகையில் இந்தப் பேச்சுகளும் வாதங்களும் உள்ளன.
இந்த சூழ்நிலையில் சமீப நடவடிக்கைகள் அனைத்தும் மலேசியாவில் ஒருவரை ஒரு வர் வெறுப்பதற்கு தூபம் போடுவதாக இருக்கின்றன. தூபம் போடுவது யார்? யார் யார் இதன் பின்னணியில் உள்ளனர்?என்பதற்கு விடை காண வேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டுள்ளது.
மாட்சிமை தங்கிய பேரரசரின் எச்சரிக்கையையும் ஆலோசனையையும் அறிவுறுத் தலையும் இவர்கள் முற்றாக அலட்சியப்படுத்தி வருகின்றனர். இந்த தைரியம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது?
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தலையும் இவர்கள் ஏற்க மறுக்கின் றனர். அதேபோன்று மலாய் ஆட்சியாளர்களையும் அவர்களின் ஆலோசனைகளையும் சிலர் பகிரங்கமாகவே விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றனர். நாட்டில் திடீர் என இப்படி ஒரு மாற்றம் ஏற்படுவதற்கு என்னதான் காரணம்? யார்தான் காரணம்?
பேரரசரையும் மலாய் ஆட்சியாளர்களையும் விமர்சிக்கும் அளவுக்கு இன்று நிலைமை விபரீதமாகி வருகிறது. ஏன் இந்த திடீர் மாற்றம் என்று புரியாமல் அமைதியை விரும் பும் சமானிய மக்கள் குழம்பிப் போய் இருக்கின்றனர்.
வேலையின்மை, நிதிச்சுமை, சமையல் பொருட்களின் கட்டுக்கடங்காத விலை அதிகரிப்பு, பணமதிப்பு வீழ்ச்சி, உள்நாட்டு அரிசி பற்றாக்குறை, ஏழைகளின் வாழ் வாதாரம் போன்ற அடிப்படை பிரச்சினைகளை இப்போது யாராவது பேசுகிறார்களா? விவாதிக்கிறார்களா?
அதற்கு பதிலாக வன்மம் நிறைந்த பேச்சுகள், மற்ற சமயத்தவரின் இதயங்களை கிழித்தெறியும் விவாதங்கள்தான் இப்போது கட்டுக்கடங்காமல் போய்க்கொண் டிருக்கின்றன.
ஒரு சில அரசியல்வாதிகள்தான் இதில் முன்னணி வகிக்கின்றனர். மதம், சமயம் தொடர்பான விவகாரங்களில் இவர்களின் வாதங்களும் பேச்சுகளும் எரியும் நெருப் பில் எண்ணெய்யை ஊற்றுவதுபோல் உள்ளது.
மக்களின் அடிப்படைத் தேவைகளான சமச்சீரான கல்வி, சிறந்த மருத்துவம், மக்கள் உடல்நலம், தூய்மையான காற்று, சுத்தமான குடிநீர், நியாய விலையில் அத்தி யாவசிய உணவுப் பொருட்கள் போன்றவற்றில் அதீத கவனம் செலுத்தி மக்களின் சுமைகளை இறக்கி வைக்க வேண்டிய அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள் சமயம், இனம் சமபந்தப்பட்ட விதண்டாவாதங்களில் காலத்தை விரயமாக்கிக் கொண் டிருக்கின்றனர்.
வட்ட மேஜையில் அமர்ந்து உடனடியாக சுமுகமாக தீர்வு காணும் பொறுப்பில் உள்ள தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு வாய்மூடி மௌனியாக இருப்பது ஏன் என்பதும் புரியவில்லை.
சாமானிய மக்களின் தேவைகள், சுமைகள் குறித்து அரசியல்வாதிகளும் மக்கள் பிரதி நிதிகளும் எப்போது பேசப்போகிறார்கள்? சமய – மத நல்லிணக்கம், புரிந்துணர்வு, இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை, சகிப்புத் தன்மை பற்றி எப்போது யோசிக்கப்போகிறார்கள்?